பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பிஎஸ். மூர்த்தி நகர் எச் பிளாக்கை சேர்ந்தவர் முருகன் (41). இவர் ஆட்டு தொட்டியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணியாற்றுகிறார். கடந்த 13 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு காவியா (12), சூர்யா (10) என்ற குழந்தைகள் உள்ளனர்.நேற்று மரக்காணத்தில் நடைபெற்ற உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு அனைவரும் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதில் குழந்தைகள் இருவரும் புளியந்தோப்பில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிவிட்டனர். இதன்பிறகு தனது வீட்டுக்கு வந்ததும் இரவு ஒரு மணிக்கு ராஜேஸ்வரி, யாருக்கோ போன் செய்து நீண்டநேரமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், மனைவியிடம், ‘’இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாய்’’ என்று கேட்டதால் தம்பதி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுசந்தேகம் அடைந்த முருகன் கோபத்துடன் சென்று ஆடு வெட்டும் கத்தியை எடுத்துவந்து ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ராஜேஸ்வரியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.