வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இதில் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி, உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் கடந்த 23ம் தேதி அட்டகட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் பயிற்சியுடன் தொடங்கியது. 24ம் தேதி முதல் கள பணிகள் நடைபெற்று வந்தது. தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகள் 8 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றுடன் அதாவது 7 நாட்களில் களப்பணிகள் முடிவடைந்தது.
வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட 8 இடங்களில் நடைபெற்ற 16 நேர்கோட்டு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் இருந்தவர்கள் வெளியேறினர். கணக்கெடுக்கும் பணியில் இறுதி நாளான இன்று (31ம் தேதி) பட்டியல் தயார் செய்து, எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் உயர் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். நேற்று வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் களப்பணிகளை ஆய்வு செய்து, களப்பணியாளர்களை உற்சாகப்படுத்தினார்.