சென்னை: சென்னை மாநகர் 3 ஆக பிரிக்கப்பட்டு, தாம்பரம், ஆவடிக்கு புதிய கமிஷனரகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் தாம்பரம் கமிஷனரின் எல்லைக்குள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து போலீஸ் நிலையங்கள் பிரிக்கப்பட்டன. தாம்பரம் போலீஸ் சரகத்தின் முதல் கமிஷனராக ரவி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனால் இன்று மாலையுடன் அவர் ஓய்வு பெறுகிறார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
இவரது சொந்த மாவட்டம் திண்டுக்கல். 1991ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர்ந்தார். பிஎஸ்சி(விவசாயம்) மற்றும் சைபர் கிரைம் தொடர்பான பட்டங்களை பெற்றுள்ளார். விவசாயத்தில் பிஎச்டி பெற்றுள்ளார். இவர் தன்னுடைய முதல் காவல் பணியை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் தொடங்கினார். 1994ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகவும் பணியாற்றினார். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பணியாற்றியுள்ளார். முதல்வர் மற்றும் ஜனாதிபதி பதக்கங்களையும் பெற்றுள்ளார்.