×

தர்மபுரி உள்பட 3 மாவட்டத்தில் 1500 பேருக்கு கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறியுள்ளோம்: கைதான நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம்

தர்மபுரி: தர்மபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 8 பேரும் சேலம் சிறையிலடைக்கப்பட்டனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறியதாகவும், பெண் குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் கைதான நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.தர்மபுரி ராஜாபேட்டை ஏரிக்கரை அருகே, வெங்கடேசன் என்பவரது வீட்டில், 4 கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என நவீன ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்து பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட முயன்ற ஜோதி(33), சுதாகர்(37), சதீஷ்குமார்(37), நர்ஸ் கற்பகம்(38), குமார்(38), வெங்கடேஷ்(33), சரிதா(40) ஆகிய 7 பேரை, போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் கற்பகத்தின் கணவர் விஜயகுமார்(43) கைது செய்யப்பட்டார். கைதான 8 பேரில், 3 பெண்களை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற 5 பேரை சேலம் மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் சிலரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்தது குறித்து, நர்ஸ் கற்பகம் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களிடம், எங்களது செல்போன் எண்ணை கொடுத்துள்ளோம். அந்த மருத்துவமனைகளுக்கு வரும் கருவுற்ற பெண்களிடம், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரியவேண்டுமா என ஊழியர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் சரி என்றால், உடனே எங்களது செல்போன் எண்ணை ெகாடுப்பார்கள். அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள். நாங்கள் உரிய ஆலோசனைகளை கூறுவோம். அதற்கு சரி என்றால் உடனே அவர்களுக்கு ஒரு தேதியை கொடுப்போம். அதன் பின்னர் தர்மபுரிக்கு வரவழைப்போம். கருவுற்ற பெண்கள் 6 முதல் 8 பேர் வரை சேர்ந்தவுடன், ஸ்கேன் செய்து சிகிச்சை அளிப்போம். அதன்மூலம் அதிக வருவாய் கிடைத்து வந்தது.

வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பத்தின்பேரில், கருவை கலைத்துவிடுவோம். சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பின்போது, நாடி துடிப்பு குறைந்தது. உடனே கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது, அவர் கொடுத்த தகவலின்பேரில் கூட்டத்தோடு சிக்கிக் கொண்டோம். இதுவரை 1500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, கருவில் உள்ள பாலினம் என்ன என்பதை கண்டறிந்து கூறியுள்ளோம். அதை வைத்து பெண் குழந்தையாக இருந்தால், அவர்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர். இவ்வாறு கற்பகம் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Dharmapuri , Confession
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி