திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியின் அரசியல் பயிலரங்கத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அன்புமணி அளித்த பேட்டியில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு அரசியல் கட்சிக்காக பயிலரங்கம் 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, கட்சியினருக்கு பயிற்சி அளித்தது பாமகதான். இதன்மூலம் புதிய செயல் திட்டங்களை கொண்டுவரப்போகிறோம். பாமக 2.0வில் என்ன செய்யப்போறோம் என்பதை தற்போதைக்கு சொல்லமாட்டேன்.
ஏன் என்றால், மாற்று கட்சியினர் காப்பி அடித்து விடுகின்றனர். இன்னும் 4 ஆண்டுகள் உள்ளதால் மக்களை அணுகுவோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் இங்கே வந்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களின் பதவி பறிக்கப்படும்.என்றார். நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.