அமிர்தசரஸ்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்துவை தேர்தலில் தோற்கடித்த பெண் எம்எல்ஏ ஜீவன் ஜோத் கவுருக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பஞ்சாப்பில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சித்து மற்றும் எஸ்ஏடி கட்சியின் மூத்த தலைவர் பிக்ரம் மஜிதியா ஆகியோரை தோற்கடித்த ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ ஜீவன் ஜோத் கவுருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் மிரட்டல்கள் வந்துள்ளன. அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘செஹர்தா அடுத்த நாராயண்காரைச் சேர்ந்த சிக்கந்தர் சிங் சந்து என்பவர், என்னை சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தலான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டி வருகிறார். அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவுகளை போட்டு வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து சிக்கந்தர் சிங் சந்து மீது ஐபிசியின் 506, 509 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.