தொண்டாமுத்தூர்: சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் படிக்கட்டு மற்றும் மலைப்பாதையில் செல்ல இரவு 7 மணிக்கு மேல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதமலை கோயில் அருகிலுள்ள ஆதிவாசிகள் குடியிருப்பில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் சிறுத்தை ஒன்று தங்கரதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் வந்தது பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியதால் கோயில் ஊழியர்கள், மலைவாழ்மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி கூறுகையில், ‘‘வனத்துறையினர் வேண்டுகோளை ஏற்று இரவு 7 மணி வரை மட்டுமே மலைப்பாதை மற்றும் படிக்கட்டில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதன் பிறகு கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படமாட்டாது. ஆனால் இரவு 8.30 மணி வரை கோயிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்’’ என்றார்.