திருப்பத்தூர் : தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு வாணியம்பாடியில் உள்ள மக்கள் குறைதீர்வு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு அருகே ஏலகிரி மலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த கார், பேரணாம்பட்டிலிருந்து ஏலகிரி மலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் மீது மோதியது. இதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
அப்போது இந்த விபத்தை பார்த்த அமைச்சர் உடனடியாக தனது காரை நிறுத்தி, விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தனது வாகனத்தில் வைத்திருந்த சால்வை மற்றும் துண்டுகளை அளித்து முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அமைச்சர் எ.வ.வேலு மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கும், வருவாய்த்துறை அதிகாரிக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்து உடனடியாக படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அமைச்சரின் மனிதாபிமான இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.