கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை நேற்று தொடங்கியது. இதனால், தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, நடுஹட்டி, டானிங்டன் மற்றும் கொடநாடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கனமழையால் பஸ் நிலையம் பகுதியில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையில் திடீரென சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் கனமழையால் அவர்கள் அவதிப்பட்டனர்.