சிவகிரி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் செல்லச்சி என்ற இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காட்டுத்தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது. தொடர்ந்து 2வது நாளாக சனிக்கிழமையும் தீ பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வாசுதேவநல்லூர் ரேஞ்சர் ஸ்டாலின், கடையம் ரேஞ்சர் சுரேஷ் மற்றும் சிவகிரி வனச்சரக உதவி வனபாதுகாவலர் மணிகண்டபிரபு மற்றும் 50க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் போராடினர். 2வது நாளாக போராடிய நிலையில் பச்சை இலைகளை கொண்டு காட்டு தீயை தடுத்து இன்று அதிகாலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டு தீயில் அரிய வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து நாசமாயின. மூங்கில் மரங்களும், தேங்கு, வேங்கை உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகின. வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதி முழுவதும் சாம்பல் பரவி வருகிறது. வேளாண்மை செய்யப்பட்டுள்ள பயிர்களில் சாம்பல்கள் படிந்து காணப்படுகிறது.