அபுஜா: உக்ரைன் போரால் ஆப்ரிக்க நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், நைஜீரியாவில் உணவு வாங்கும் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர். ைநஜீரியா நாட்டின் தெற்கு நைஜீரியாவுக்கு உட்பட்ட போர்ட் ஹார்கோர்ட் நகரில் உள்ள தேவாலயத்தில் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. நூற்றுக் கணக்கான மக்கள் உணவை வாங்க குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 31 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரிவர்ஸ் ஸ்டேட் போலீசார் கூறுகையில், ‘உணவை வாங்குவதற்காக மக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 31 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேவாலயத்திற்குள் மக்கள் கூட்டம் திடீரென நுழைந்த போது, தேவாலய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளே அமர்ந்திருந்தனர். வெளியில் இருந்து கிளம்பிய கூட்டம் ஒரே வாயில் வழியாக சென்றதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
நைஜீரியாவில் உணவு விநியோகம் தொடர்பாக நடந்த பல நெரிசல்களில் கடந்த ஆண்டு மட்டும் ஏழு பெண்கள் நெரிசலில் சிக்கி மிதிப்பட்டு இறந்தனர். சமீபத்திய உலக வங்கி அறிக்கையின்படி, நைஜீரியர்களில் 10 பேரில் நான்கு பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். உக்ரைன் - ரஷ்ய போர் நெருக்கடியால், அவர்களுக்கு கோதுமை மற்றும் எரிவாயு கிடைக்கவில்லை. இதனால், உணவு மற்றும் எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக தன்னார்வ நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.