ஆவடி: ஆவடி சிஆர்பிஎப் பயிற்சி மைதானத்தில் 1247 காவலர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) பயிற்சி முகாமில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு நிறைவு விழா ேநற்று நடந்தது. இதில் சிஆர்பிஎப் ஆவடி சரக டிஜஜி கேவல்சிங் தலைமை தாங்கினார். அப்போது, பயிற்சி நிறைவு செய்த 1,247 காவலர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஐஜி சத்ரவேதி ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த 44 வார கடின பயிற்சியில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, அணிவகுப்பு, ஆயுதங்களை கையாளும் பயிற்சி, வெடிகுண்டு எறியும் பயிற்சி, வரைபடை களப்பயிற்சி, துப்பாக்கியுடன் கூடிய குண்டு எறியும் பயிற்சி, முதலுதவி, பேரிடர் மேலாண்மை உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் 4 வாரங்கள் அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் பயிற்சியின் ஒரு அங்கமாக, 7 நாட்களான உலர் உணவு பொருட்களின் கூடிய காடுகளில் தங்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 10 பயிற்சி காவலர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. பின்னர் பயிற்சி நிறைவு செய்த 1247 காவலர்களும் சத்தியபிரமாணம் எடுத்து பொறுப்பேற்றனர். இதில் துணை கமாண்டன்ட் சரவணன், சந்திரசேகரன், கான் சலீம் அகமது, விஜயகுமார், போரா, கண்ணன் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.