சேலம்: ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா இன்று மே 25 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள அண்ணா பூங்கா மட்டுமல்லாமல் ஏரி பூங்கா, படகு இல்லம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்கள் இரவு நேரங்களில் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
உற்சாகமாக நடைபெற்று வரும் கோடை விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விழாவின் சிறப்பு அம்சமாக ஏற்காடு கலையரங்கில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இசை கச்சேரி மற்றும் ரோபோ நடனங்களை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி ஆகியவையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.