×

இது கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு: புதிய பள்ளி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக அரசு, கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக அமைந்திருக்கிறது என புதிய பள்ளி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை பள்ளிக்கரணையில். டி.ஏ.வி கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  திறந்து வைத்து ஆற்றிய உரை:
கடந்த 60 ஆண்டு காலத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வாழ்வில் ஒளியேற்றிய கல்வி நிலையமாக டி.ஏ.வி குழுமம் செயல்பட்டு வருவதற்கு மனமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கோபாலபுரம் என்பது நான் பிறந்த, வளர்ந்த பகுதி. அந்த பகுதியில் முதல் பள்ளி 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3வது பள்ளிக்கூடத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் 1989ம் ஆண்டு முகப்பேரில் தொடங்கி வைத்தார். இப்போது பள்ளிக்கரணையில் இந்த பள்ளியை நான் தொடங்கி வைக்க வந்திருக்கிறேன். ஒரு மனிதனிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத ஒரு சொத்து எது என்று கேட்டீர்கள் என்றால், இந்த கல்வி என்ற சொத்துதான், யாராலும் பறிக்க முடியாது.

அத்தகைய சொத்தை உருவாக்கித் தரக்கூடிய கருவூலங்கள்தான் இதுபோன்ற கல்விச் சாலைகளாக அமைந்திருக்கிறது. 2 அரசுப் பள்ளிகளில் தகுதி வாய்ந்த கல்விக்கான உதவிகளை டிஏவி பள்ளி சார்பில் செய்து தருவதற்காக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள். திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேனிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அரசின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதன் மூலமாக லட்சக்கணக்கான மாணவ, மாணவியரை மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அவர்களுக்கு கடந்த 2 ஆண்டு காலத்தில் விடுபட்ட பாடங்களைக் கற்பித்து வருகிறோம். தமிழக அரசு, கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக அமைந்திருக்கிறது. பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிடாமல் கல்லூரிக் கல்வியும், அதைத் தொடர்ந்து உயர்கல்வியும் கொடுக்கும் அரசாக தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தயானந்தா ஆங்கிலோ வேதிக் என்பதன் சுருக்கமாக டிஏவி என்பது அமைந்திருக்கிறது. ஆன்மிகவாதியாக இருந்தாலும், மதத்தில் சீர்திருத்தம் பேசியவர்தான் தயானந்தர். உருவ வழிபாட்டை நிராகரிக்கக் கூடியவராகவும், மதத்தின் பெயரால் நடக்கக்கூடிய மோசடிகளையும் கண்டிப்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்தக் காலத்தில் இருந்த குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

அந்த வகையில் 150 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர்தான் தயானந்தர். திரும்பத் திரும்ப தயானந்தர் வலியுறுத்தியது உண்மையைத்தான். ‘‘எப்பொழுதும் உண்மையைப் பேசுபவன், நல்லொழுக்கத்தின் கட்டளைகளின்படி செயல்படுபவன், மற்றவர்களை நல்லவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்க முயல்பவன் நல்லவனும் ஞானம் உள்ளவனும் ஆவான்’’ என்று அவர் சொல்லியிருக்கிறார். உண்மை, ஒழுக்கம் ஆகியவற்றை தயானந்தர் வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோல் மாணவ, மாணவியரும் உண்மையுடமும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர வேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தனித்திறமைகளும், அறிவாற்றலில் கூர்மையும், உண்மையும், நேர்மையும் உள்ளவர்களால் எளிதில் முன்னேற முடியும். அத்தகைய நோக்கத்தை வளர்ப்பதாக இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதே நேரத்தில், இன்னொரு முக்கியமான வேண்டுகோளை இங்கு வைப்பது எனது கடமையாக கருதுகிறேன்.

தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளிப்பவையாக உங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதேபோல், உங்களது மிகச்சிறந்த திட்டங்களுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும், ஒவ்வொரு மனிதருக்கும் மிகமிக முக்கியம் என்ற வகையில் இந்த வேண்டுகோளை உங்களிடத்தில் வைக்கிறேன்.

மிகப்பெரிய சீர்திருத்தவாதியின் பெயரால் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனமானது, மேலும் மேலும் வளர்ந்து அனைவருக்கும் கல்வி ஒளியைப் பாய்ச்சிட வேண்டும் என்று அன்போடு கேட்டு, இன்னும் பல சிறப்புகளைப் பெற்று எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் அன்போடு கேட்டு, இந்த நல்ல வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை எடுத்துச்சொல்லி, என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு பேசினார்.

Tags : Chief Minister ,MK Stalin , The government, which gives importance to education, inaugurated the new school, Chief Minister MK Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...