ஆலங்காயம் : தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அளவு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தேங்கிய மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழை காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சியினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.