சென்னை : 2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருடத்திற்கு 4 முறை அதாவது குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் பேசிய போது, தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் இனி ஆண்டிற்கு 6 முறை நடைபெறும் என்று அறிவித்தார். இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் ஜன.26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம்,ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்.2 காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களுடன் இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவ.1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
அத்துடன் 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும், சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டுதோறும் ‘‘உத்தமர் காந்தி’’ விருது, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்காக உயர்த்தித்தரப்படும் என்றும் கூறினார். இந்நிலையில் 2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.