×

ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்

திருமலை: ‘இனிதான் பாஜ.வின் ஆட்டம் ஆரம்பமாகிறது. தெலங்கானாவில் அடுத்தது பாஜ ஆட்சிதான் அமையும்,’ என்று ஐதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையம் வந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, மாநில முதல்வர் சந்திர சேகர ராவுக்கு பதிலாக மாநில அமைச்சர் தலசானி சீனிவாஸ், பாஜ தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி உட்பட பல மூத்த பாஜ நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர், பேகம்பேட்டில் ஏற்பாடு செய்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில், ‘தெலங்கானா மக்களுக்கு நமஸ்காரம்,’ என தெலுங்கு வணக்கம் தெரிவித்து தனது உரையை மோடி தொடங்கினார். அவர் பேசியதாவது:
தெலங்கானாவை தொழில்நுட்ப மாநிலமாக மாற்றுவோம். தெலங்கானாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில்தான் உள்ளது. ஒரு குடும்பத்திற்காக தெலங்கானா போராட்டம் நடைபெறவில்லை. ஒவ்வொரு தெலங்கானா பாஜ தொண்டரும் வல்லபாய் படேல் காட்டிய வழியில் நடக்க வேண்டும்.

இளைஞர் சக்தியால் தெலங்கானாவை ஒரு சக்திமிக்க மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். சுய லாபத்திற்காக இங்கு அரசியல் நடக்கிறது. தெலங்கானாவைப் பின்னுக்கு தங்கவைக்கும் சக்தி அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. பாஜ.வின் போராட்டம் நல்ல தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதே. தெலங்கானாவில் மாற்றம் கட்டாயம் வரும். இனிதான் ஆட்டம் ஆரம்பம். குடும்ப அரசியலால் தெலங்கானாவை கட்டிப் போட நினைக்கிறார்கள். அது நடக்காது. குடும்ப அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே கேடு விளைவிக்கும். வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம். தெலங்கானாவில் அடுத்தது பாஜ ஆட்சிதான். தெலங்கானா மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தங்களின் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவே நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* 2வது முறை மோடியை புறக்கணித்த முதல்வர்
பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக, அவரை சந்திப்பதை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று காலை பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்திக்க புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே சமத்துவ ராமானுஜர் சிலை திறப்பு விழாவிற்கு கடந்த பிப்ரவரியில் வந்த போதும் பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் புறகணித்தார். அப்போது உடல்நிலை சரியில்லை எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது பிரதமர் வருகைக்கு முன்பே அவர் பெங்களூர் புறப்பட்டு சென்றது  சந்திரசேகர ராவின் பாஜ மீதான கோபம் வெளிப்படையாகி இருக்கிறது.

Tags : Modi ,Hyderabad ,Telangana , Modi's speech in Hyderabad The rule in Telangana has just begun
× RELATED ஹைதராபாத்தில் ரசாயன தொழிற்சாலையில்...