புதுடெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்துவுக்கு சிறையில் கிளார்க் பணி வழங்கப்பட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, கடந்த 1988ம் ஆண்டு நடந்த சாலை மோதலில் 65 வயதுடைய குர்னாம் சிங் என்பவரை தாக்கினார். இதில், அவர் இறந்தார். இந்த வழக்கில் சித்துவுக்கு அரியானா உயர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு கடந்த 19ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
முதலில் சில நாட்கள் வழக்கமான கைதிகளை போலவே அவர் நடத்தப்பட்டார். இப்போது நிலைமை மாறி விட்டது. சித்துவுக்கு ரத்தம் உறைதல் குறைபாடு, கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்கள் உள்ளன. இதை நீதிமன்றத்தில் தெரிவித்து தனக்கு மருத்துவர்கள் பரிந்துரை அளிக்கும் உணவை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதை நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதன்படி, சிறையில் தினமும் 5 வேளை விதவிதமான உணவு, பழங்கள், சூப், ஜூஸ், காய்கறிகள், பாதாம், வால்நட் போன்றவை வழங்கப்படுகின்றன. கொழுப்பு, நெய் கலந்த உணவுகள், பால் போன்றவை தவிர்க்கப்படுகின்றன. மேலும், சிறையில் அவருக்கு கிளார்க் பணியும் வழங்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிறை சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவர் பார்க்க வேண்டும். இதற்காக, அவருக்கு தினமும் முதலில் ரூ.40ம், போக போக ரூ.90 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.