×

காதலே காதலே சத்தத்திற்கு சொந்தக்காரர்

‘சாரங்கி’ இந்த சொல் ஒரு பழமையான தந்தி வாத்தியத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசையில் அதிகம் வாசிக்கப்படும் வாத்தியம். தென்னிந்தியாவில் இந்த வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர்களைப் பார்ப்பதே அரிது எனும்போது, இதை வாசிக்கும் பெண் கலைஞர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது. இந்த வாத்தியத்தை வாசிக்கும் ஒரே தென்னிந்தியப் பெண் என்னும் புகழுக்கு உரியவராக இருப்பவர் மனோன்மணி. சாரங்கியை வாசிப்பது அவ்வளவு எளிதானதல்ல. விரல் நகத்தின் பக்கத்தைப் பயன்படுத்தி வாசிக்க வேண்டும். ஆனால், இதிலிருந்து கிளம்பும் நாதம் அலாதியான இனிமை கொண்டது.

“தாத்தா பி.வி.சண்முகம், அம்மா சரோஜா இருவரும்  தில்ரூபா பிளேயர். எம்.எஸ்.வி சாரிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் வரை ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் அம்மா வாசித்திருக்காங்க. இளையராஜா சாரோடு நிரந்தரமா வேலை பார்த்திருக்காங்க. அவங்க வாசிக்கிறதை சின்ன வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். கர்நாடிக் மியூசிக் தெரியும். சாரங்கினு ஒரு இசைக்கருவி இருக்கிறது தெரிஞ்சதும், அதை வாசிச்சுப் பார்க்கணும்னு ஆசை வந்தது. சாரங்கி வாசிக்கிறதும் அதுல ஸ்பெஷலைஸ் பண்றதும் ரொம்பவே கஷ்டமானது.

அந்த கருவிக்குப் பழகி, அது நமக்கு வசப்பட கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகும். அம்மா-அப்பாவைப் பொறுத்தவரைக்கும், படிப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கணும்கிறதுல தெளிவா இருந்தாங்க. எம்.சி.ஏ. முடிச்சிட்டு போலாரிஸ்ல வேலை பார்த்திட்டிருந்தேன். கல்யாணமாச்சு. அதுக்குப் பிறகு என்னோட சாரங்கி ஆர்வம் பத்தி என் கணவரிடம் சொன்னேன். ரொம்பவே என்கரேஜ் பண்ணினார்” என்று கூறும் மனோன்மணி, இந்த கருவி வாசிப்பதற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பதை பற்றி பகிர்ந்தார்.

“தில்ரூபா மாதிரி சப்தம் இருந்தாலும், அதைவிட பவர்புல்லா அழகான டோன் இருக்கும். இதன் மீது இருந்த ஆர்வத்தால் யூடியூப்ல பார்த்து சாரங்கி வாசிக்க ஆரம்பிச்சேன். மும்பை, ஹைதராபாத்னு வேற வேற இடங்கள்ல நாலு சாரங்கி வாங்கினேன். ஆனா, எதுலயுமே எனக்கு சரியான டோன் கிடைக்கலை. இதை பியூரா ராஜஸ்தானில்தான் கேட்க முடியும். அதனால் வடக்கில் போய் கற்று கொள்ள வேண்டுமென்று சமூகவலைதளத்தில் தேடினேன்.

தேடியதன் பலனாக பிரபல சாரங்கி வித்வானை தொடர்பு கொண்டு டில்லிக்கு சென்றேன். அவரின் நூறு வருட கருவியை வாங்கினேன். தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக குரு உஸ்தாத் குலாம் சபீர் கானிடம் கற்று கொண்டிருக்கிறேன்” என்கிறார் மனோன்மணி. திரைப்படப் பாடல்களுக்கும் சாரங்கி வாசிப்பதில் பிஸியாக இருக்கும் இவர், முதன் முதல் சாரங்கி வாசித்தது, இசையமைப்பாளர் இமான் இசையில் மைனா படத்தில் இடம் பெற்ற  ‘கிச்சுக்கிச்சு...’ பாடலாம். தொடர்ந்து ரம்மி படத்தில் ‘கூடை மேல கூடை வச்சு…’ ‘சொப்பன சுந்தரி’  போன்ற எண்ணற்ற ஹிட் பாடல்கள் வாசித்திருக்கிறார்.

“தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழி பாடல்களுக்கும் வாசித்திருக்கிறேன். இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், அனிருத், ஜிப்ரான், ஹிப் ஆப் தமிழா ஆகியோருடன் பணி புரிந்து வருகிறேன். ஒவ்வொரு இசையமைப்பாளர் கூட ஒர்க் பண்ணினதும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கு. சினிமாவுக்கு வாசிக்க நிறைய எமோஷன்ஸ் வேணும். பர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம். சினிமா ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் நான் என்னோட கிளாசிக்கல், ஃபியூஷன் பேண்டுலயும் ஆல்பங்கள்ல வாசிக்கிறதுலயும் பிஸியா இருக்கேன்”  என்றார்.

‘‘சாரங்கியை கையாள்றது ரொம்பவே கஷ்டம். மொத்தம் 37 கம்பிகள் இருக்கும். அதுல முக்கியமான 3 கம்பிகள்லதான் வாசிக்க வேண்டியிருக்கும். இந்த வாத்தியம் மரத்துல பண்ணப்பட்டதால, குளிர்காலத்துல அதைக் கையாள்றது இன்னும் சிரமம். நகத்துக்குப் பின்னாடி உள்ள கீழ்ப் பகுதியால வாசிக்கணும். வாசிக்கிறபோது அந்த இடம் மரத்து, தடிச்சுப் போயிடும். அப்பதான் நாம எதிர்பார்க்கிற சத்தம் வரும். முதல் முறை வாசிச்சப்ப எனக்கும் கையெல்லாம் புண்ணாகி, ரத்தம் வழிஞ்சு, கொப்புளம் வந்திருக்கு. அந்த பயமும் மிரட்சியும் என் குருநாதர் வாசிக்கிறதைப் பார்த்ததும் மாயமாகிடுச்சு” என்று கூறும் மனோன்
மணியின் சாரங்கியிலிருந்து ஒலித்த நாதம் தான் இளசுகள் மனதில் சக்கைப்போடு போட்ட ‘காதலே காதலே’ பாடல்.

“96 படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே’  பாடல் எனக்கான தனி அடையாளத்தைக் கொடுத்தது. அந்த சத்தம் வயலின் என்று பெரும்பாலானோர் நினைத்திருப்பார்கள். யூடியூபில் பார்த்த பின் தான் பலர் சாரங்கி என்று அடையாளம் கண்டுகொண்டனர்’’ என்றார். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையமைப்பில் சீன வயலினான எர்ஃபு என்ற வாத்தியத்தையும் வாசித்து வரும் மனோன்மணி, இங்குள்ள இசையமைப்பாளர்கள் வெளி ஆட்களை அழைத்து வந்து வேலைப் பார்ப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுவது பற்றி பேசும் போது, “ஒவ்வொரு நாட்டிலும், பகுதியிலும் வாசிக்கும் போது அதன்  ஸ்டைல் ஆஃப் பிளே, அதிலிருந்து வரும் சத்தம் வேறு மாதிரி இருக்கும்.

பொதுவாக பாம்பேயிலிருப்பவர்கள் ஹிந்துஸ்தானி பிளேயராக இருப்பாங்க. அதை இங்குள்ளவர்கள் வாசித்தாலும் அந்த ஸ்டைல் இருக்காது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாட்டுபுற கலைஞர் பாடும்போதும், இசைக்கும்போதும் அதன் தன்மை  மண் வாசனையோடு நிஜமாக இருக்கிறது. எனவே தற்போது பல இசையமைப்பாளர்கள்  அவர்களை லைவ்வாக வாசிக்க வைக்கிறார்கள்.  இதே வெஸ்டர்னுக்கும் பொருந்தும்.

டிஜிட்டல் வளர்ச்சியால் பல சப்தங்கள் கணினியிலேயே கொண்டு வருகின்றனர். இது பயமாகதான் இருக்கிறது. ஆனால், அப்படி உருவாக்குவதைக் கொஞ்ச நாள்தான் கேட்க முடிகிறது. இதனால் மீண்டும் லைவுக்கு திரும்புகிறார்கள்” என்று  மென் சிரிப்புடன் பேசுபவருக்கு சாரங்கியை மேற்கத்திய இசையுடன் இணைத்து வாசிப்பது விருப்பமான விஷயம் என்றாலும், பிற்காலத்தில் கிளாசிக்கல் பிளேயராக பிரபலமாவதே லட்சியமாம்.

Tags : owner ,
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...