சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை பதிவேற்றம் செய்யப்படுவதாக துணை மாநில கணக்காயர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளமான www.agae.tn.nic.in என்ற தளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்படும். அதிகாரிகள், சந்தாதாரர்கள் கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அலுவலக வலைதளத்தில் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.