×

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்க நவீன தொழில்நுட்பம்: ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களின் கூட்டு கண்டுபிடிப்பு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்க, ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐஐடி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் பலராமன் ரவீந்திரன் கூறியதாவது: சென்னை ஐஐடி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து காப்பாற்ற உதவும் ‘CombSGPO’ என்ற இயந்திர கற்றல் அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர். வன அதிகாரிகள் மற்றும் டிரோன்களின் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து பாதுகாக்க ஒரு சிறந்த வழிமுறையாக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் டிரோன்கள் குறைவாக இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் இந்த வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.

இது கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்க ஒரு நல்ல உத்தியை வழங்குகிறது. இந்த புதிய அல்காரிதம், அதே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட முந்தையவற்றை காட்டிலும் அதிக திறன் கொண்ட உத்திகளை வழங்குகிறது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள விலங்குகளை பற்றிய தகவல்களின் அடிப்படையில், வேட்டையாடுபவர்களின் இருப்பை கணித்து வனத்துறை அதிகாரிகளை ரோந்துப் பணியை மேற்கொள்ள செய்து வேட்டையை தடுக்கிறது. வனவிலங்கு வேட்டையாடுதல், சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க இந்த அல்காரிதம் களம் அமைத்துக் கொடுக்கும். இரண்டு மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களின் இந்த கூட்டு ஆராய்ச்சிப் பணி, வன விலங்குகள் வேட்டையாடப்படும் சம்பவங்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : IIT Madras ,Harvard University , Modern technology to prevent poaching in protected forest areas: joint discovery by IIT Madras and Harvard University researchers
× RELATED 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி...