டெல்லி: தேசிய பங்கு சந்தையில் இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் செலுத்துமாறு சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். இமயமலை சாமியார் பங்குசந்தை நிர்வாகத்தில் அவரது தலையிடு அதன்படி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பலமணி நேர விசாரணைக்கு பிறகு சட்ட விரோத பண பரிமாற்ற குற்றசாட்டு தொடர்பாக ஏற்கனவே ஒரு முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். திகார் சிறையில் பலமணி நேரம் விசாரித்த அதிகாரிகள் இரண்டாவது முறையாக வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
இதனிடையே தேசிய பங்குசந்தை பரிவர்த்தனைகளில் ஏற்படுத்திய நஷ்டத்திற்காக ரூ.3 கோடி12 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 15 நாட்களில் செலுத்தவில்லை எனில் சித்ரா ராமகிருஷ்ணாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மீண்டும் அவர் போலீசாரால் கைது செய்யக்கூடும் என்றும் செபி எச்சரித்துள்ளது. தேசிய பங்குசந்தையின் முதன்மை இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா முன்னணி நிறுவன ஏஜெண்டுகளுக்கு பங்குசந்தை தகவல்களை முறைகேடாக கொடுத்து பல ஆயிரம் கோடி முறைகேடு செய்தார் என்பது வழக்காகும்.
இவரை கடந்த மார்ச் 6-ம் தேதி கைது செய்த சிபிஐ டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளது. வருமான வரித்துறையினரும் விசாரித்து வருகின்றனர். தனது ஆலோசகரான ஆனந்த் சுப்பிரமணியணியனுக்கு ஆண்டுக்கு ரூ 4.21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறையினரும் நேற்று இரண்டாவது நாளாக சித்ரா ராமகிருஷணாவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.