×

வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. பொய்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டார் : ராமதாஸ்

சென்னை : வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் மறைவுக்கு பாமக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 35 ஆண்டுகளாக சிறையில் வாடிய  வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன்,  அவரது உடல் நல பாதிப்புக்கு  சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். மாதையன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டார்.

அப்போதைய சூழலும், பொதுப்புத்தியும் அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தன. ஆனாலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதையனை 35 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்தது மனித உரிமை மீறல்! மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்... அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனிதநேயமற்ற அரசு எந்திரம் தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்!என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தொடர் சிறைவாசத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Veerappan ,Madhayan ,Ramadas , Veerappan, elder brother, Madhayan
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...