நெல்லை: நெல்லை அடுத்த மானூர் அருகே நெல்லை திருத்து தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் (45). ஆர்எஸ்எஸ் பிரசார அணி ஒன்றியச் செயலாளர். கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மைத்துனர் மாரியப்பனை மானூரில் இருந்து களக்குடிக்கு பைக்கில் அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வந்த முருகன், வழியில் களக்குடி- எட்டான்குளம் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி உறவினர்கள், பாஜ, இந்து முன்னணியினர் நெல்லை அரசு மருத்துவமனை முன்பு நேற்று மறியலில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளிக்கவே, அவர்கள் கலைந்து சென்றனர்.