×

திருவலத்தில் சுவரில் துளையிட்டு நகை அடகு கடையில் புகுந்து ரூ.85 லட்சம் பொருட்கள் கொள்ளை: இரும்பு பீரோவை உடைத்து துணிகரம்

திருவலம்:  திருவலத்தில் நகை அடகு கடையின் சுவரில் துளையிட்டு புகுந்து ராட்சத இரும்பு பீரோவை உடைத்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் அனில்குமார்(29). இவர் அங்கு அடகு மற்றும் ஜூவல்லரி கடை நடத்தி வருகிறார். வெளியூர் சென்றிருந்ததால் கடந்த 21ம் தேதி முதல் கடையை மூடியிருந்தார். இந்நிலையில், நேற்று அவரது பக்கத்து கடைக்காரான சிவசுதன் என்பவரது பங்க் கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருப்பதை பார்த்து புகார் செய்தார்.

திருவலம் போலீசார் சென்று கடையை திறந்து சோதனையிட்டனர். அப்போது, மர்ம நபர்கள் நகை கடைக்கு பக்கத்தில் உள்ள பங்க் கடையின் உள்ளே இருந்து நகை கடை சுவரில் துளையிட்டுள்ளது தெரிந்தது. நகை கடையின் தனிஅறைக்குள் இருந்த ராட்சத இரும்பு லாக்கர் பீரோவை கீழே தள்ளி காஸ் சிலிண்டர் மூலமும், இரும்பு ராடாலும் உடைத்து ரூ.30 ஆயிரம் ரொக்கம், 30 கிலோ வெள்ளி, 750 கிராம் புதிய தங்க நகை ஆபரணங்கள், ரூ.36 லட்சத்தில் கடையில் அடகு வைத்திருந்த நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பங்க்  கடையில்  இருந்து ரூ.2 ஆயிரத்தையும் திருடி சென்றுள்ளனர். திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.85 லட்சம் என கடை உரிமையாளர் தெரிவித்தார்.

Tags : Thiruvalla , Rs 85 lakh looted from jewelery pawn shop in Thiruvalla
× RELATED நாகை அருகே தனியார் நிதி நிறுவனத்தில்...