×

அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு கோலாகலம் : 800 காளைகள் சீறிப்பாய்ந்தன

திருச்சி: நான்குபட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நான்குபட்டியில் முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் உட்கார்ந்து பார்வையிடும் வகையில் மேடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் சோதனை நடத்தினர். இறுதியில் 800 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

காலை 8.45 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து கோயில் காளை முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒவ்ெவாரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை போட்டி போட்டு மாடுபிடி வீரர்கள் அடக்கினர். களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பமான  பல காளைகள் நின்று விளையாடியது.

காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மிக்சி, மின்விசிறி, தங்கக்காசு, வெள்ளிக்காசு, சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. இலுப்பூர் டிஎஸ்பி அருண்மொழி தேவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Jallikattu ,Annavasal , Annavasal, Jallikkattu, Kolagalam, bulls
× RELATED ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு