×

புதர்மண்டி கிடக்கும் கால்வாய் படையெடுக்கும் பாம்புகளால் பர்மா காலனி மக்கள் அச்சம்

சிவகாசி: சிவகாசி அருகே பர்மா காலனியில் புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் இருந்து பாம்புகள் படையெடுப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் பர்மா காலனி உள்ளது. 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். மெயின் ரோட்டில் இருந்து காலனிக்குள் செல்லும் நுழைவு பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி உள்ளது. இங்குள்ள வீடுகளில் முறையான கழிவுநீர் சேகரிப்பு தொட்டி இல்லை. இங்கு அமைந்துள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக மழைநீர் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாமல் பல இடங்களில் புதர் மண்டியும், குப்பைகளால் அடைபட்டும் காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. புதர்மண்டி கிடக்கும் கால்வாய் பகுதியில் இருந்து பாம்புகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து வருவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, கழிவுநீர் கால்வாய்களை ஊராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதை சாக்கடை திட்டத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Putharmandi , Putharmandi, canal, force, snake, fear
× RELATED சிங்கம்புணரி அருகே புதர்மண்டி கிடக்கும் நிழற்குடை