×

தர்மபுரி அருகே பயங்கரம் செய்வினை வைத்ததாக கூறி அண்ணன் வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்

தர்மபுரி: தர்மபுரி அருகே செய்வினை வைத்ததாக கூறி அண்ணனை கொன்று, அண்ணியை வெட்டி விட்டு தப்பியோடிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள சக்கிலிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், கோவை, ஈரோடு பகுதிகளில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சின்னபொண்ணு, பெருமா என 2 மனைவிகள் உள்ளனர். இதில், முதல் மனைவிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். 2வது மனைவிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது தம்பி குமார் (40). விவசாயி. இவர், ஆடு-மாடு வளர்த்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் இவரது 2 கன்றுக்குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இதற்கு, வெங்கடேசன், அவரது மனைவி பெருமா (39) ஆகியோர் செய்வினை வைத்ததே காரணம் என குமார் கூறி வந்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று மாலை வீட்டின் அருகே இருந்த வெங்கடேசன், பெருமா ஆகியோரிடம் குமார் தகராறு செய் துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், மண்டை பிளந்து வீட்டுவாசலில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் சரிந்தார். அதனை தடுக்க வந்த பெருமாவையும் குமார் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருமா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை அமைத்து கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Dharmapuri , Dharmapuri, act, brother, murder
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்