×

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ம் நாளாக நீடிக்கும் நிலையில், சிறு,குறு விசைத்தறி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் குதித்துள்ளனர். நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்றில் இருந்து வரும் 5-ம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து நூல்விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நூல்விலையை கட்டுப்படுத்தக்கோரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கியுள்ள போராட்டம் 8-வது நாளாக நீடிக்கிறது. இதனால் இதுவரை ரூ.20 கோடி வரையிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிறு,குறு விசைத்தறி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.  


Tags : Yarn prices, textiles, looms, strike
× RELATED யானை தாக்கி விவசாயி பலி