×

நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!

திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின்போது வரதட்சணையாக 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் என அத்தனையும் கொடுத்த பிறகும், இந்த வரதட்சணை எனக்கு போதாது எனக் கூறி, கூடுதல் பொருட்கள் கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்ததால் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா என்ற இளம்பெண் கடந்த ஜூன் மாதம் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வரதட்சணைக் கொடுமையினாலேயே தனது மகளைக் கொலை செய்திருப்பதாக விஸ்மயாவின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரமாக வாட்ஸ் ஆப் பதிவுகளையும் பெற்றோர் கொடுத்தனர். கேரள மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து முறையாக வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கணவர் கிரணை காவல்துறையினர் கைது செய்தனர். விஸ்மயாவை தான் அடித்துத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட அவர், இருவரும் சண்டை போட்ட பின்னர், விஸ்மயா தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

வரதட்சணை கொடுமையால்தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கிரண்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஸ்மயா கணவர் கிரண்குமார் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், ஜாமீனில் உள்ள கிரணை கைது செய்யவதற்கான நடவடிக்கை விரைவில் நடைபெறவுள்ளது. விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags : Vismaya ,Kollam Additional Court , Vismaya commits suicide, husband convicted, Kollam Additional Court
× RELATED கேரளாவில் இளம்பெண் விஸ்மயா தற்கொலை...