×

பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய நிதியமைச்சர் நேற்று முன்தினம் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 2021 நவம்பரில் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பதற்கு முன்பே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2021 ஆகஸ்டில் பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைத்தது. தமிழக மக்களுக்கு லிட்டருக்கு ரூ.3 விலை குறைவாக கிடைத்தது.

மறுபுறம், கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதன்மூலம் ஒன்றிய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், மாநில அரசுகளுக்கான வருவாயில் உயர்வு இல்லை. ஏனென்றால், ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ள அதே நேரத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைக்கிறது.

2021 நவம்பரில் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைப்பதற்கு முன்பு, பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உட்பட வரி விதிப்பு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.32.90 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.31.80 ஆக இருந்தது. 3.11.2021 அன்று அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் வரி குறைப்பு காரணமாக தமிழகத்திற்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ.1,050 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய குறைப்பினால் தமிழக அரசுக்கு ஆண்டு வருமானம் மேலும் சுமார் ரூ.800 கோடி இழப்பு ஏற்படும். கோவிட் நிவாரண நடவடிக்கைகளுக்காக மேற்கொண்ட கூடுதல் செலவினங்களால் ஏற்கனவே சுமையாக இருந்த மாநிலங்களின் நிதியில் இது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இந்த அரசு முந்தைய அரசின் ஒரு ஆபத்தான நிதி நிலையைப் பெற்றிருந்தாலும், மேலும் கோவிட் நிவாரணத்திற்காக கூடுதல் செலவினங்களைச் செய்ததாலும், மக்கள் நலன் கருதி பதவியேற்ற சில மாதங்களில் பெட்ரோல் மீதான வரிகளை குறைத்தது. குறைந்த வரிவிதிப்பு அதிகாரங்கள் இருந்தபோதிலும், தமிழகம், மாநில மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, ​​ஒன்றிய அரசு ஒருபோதும் மாநிலங்களை கலந்தாலோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலான வரி அதிகரிப்பில் அவர்களின் வெட்டுக்கள் மூலம் ஓரளவு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது மற்றும் 2014 விகிதங்களுடன் ஒப்பிடுகையில் வரிகள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. எனவே, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Finance Minister ,Palanivel Thiagarajan , Petrol, Diesel, Union Government, Minister of Finance Palanivel Thiagarajan
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...