சென்னை: அலகாபாத் திரிவேணி சங்கமம் பகுதியில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில், தமிழ் படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சதீஷ் ஜி.குமார் கூறியதாவது: எனது டைரக்ஷன் மற்றும் ஒளிப்பதிவில் ‘பீச்சாங்கை’ ஆர்.எஸ்.கார்த்திக், புதுமுகம் ரேஷ்மிகா, சுமன், ஷாயாஜி ஷிண்டே, பூ ராமு, கஜராஜ் நடித்துள்ள ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தின் ஷூட்டிங்கை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடந்த மிகப் பிரமாண்டமான கும்பமேளா விழாவில் 50 நாட்கள் படமாக்கினேன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. திரில்லர், சஸ்பென்ஸ், அறிவியல், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.
திடீரென்று காணாமல் போன தனது தங்கையை கும்பமேளா விழாவில் தேடிச் செல்லும்போது ஹீரோ சந்திக்கும் பிரச்னைகளின் மூலம் அறிவியலுக்கும், மதக் கண்ணோட்டத்துக்குமான தொடர்பு பற்றி சொல்லி இருக்கிறோம். நிர்வாண நிலையில் காணப்படும் நூற்றுக்கணக்கான அகோரிகளுக்கு மத்தியில், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினோம். காசி மற்றும் அலகாபாத் திரிவேணி சங்கமம் பகுதியில் தினமும் 10 லட்சம் பேருக்கு மேல் பக்தர்கள் கூடுவார்கள். கேமராவை மறைத்து வைத்து காட்சிகளை படமாக்கினோம். அகோரிகளுக்கு திடீரென்று கோபம் வந்து படக்குழுவினரை அடித்துவிடுவார்கள். அவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆர்.பி.பாலா தயாரித்துள்ள இந்த
படம் அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது.