×

தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கருணாசாமி கோயில் குளத்தை தூர்வாரும் போது சுடுமண் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சாவூர் கரந்தையில் 1400 ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால சோழனுக்கு கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்தது. இதில் அவர், அந்த நோயை தீர்க்க பல மருத்துவ முறையை கையாண்டும் பலனில்லாமல் போனது. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய கடவுள், கருணாசாமி கோவில் குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் தோல் நோய் நீங்கும் என தெரிவித்தாராம். அதன்பேரில் கரிகாலசோழன் இந்த குளத்தில் நீராடியதில் நோய் நீங்கியதாக கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் இந்த குளத்தை மீட்க வேண்டும் என சிவனடியார்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக இந்த குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று அந்த குளத்தை தோண்டும் போது 3 அடி விட்ட சுடுமண் உறை கிணறு ஒன்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து தண்ணீர் ஊறி கொண்டிருந்தது. இதனை பார்த்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் குளத்தை தோண்டினால் பல்வேறு உறைக்கிணறு தென்படும் என நினைத்தனர்.

அதன்படி குளத்தில் தொடர்ந்து தூர்வாரும் போது அடுத்தடுத்து 6 சுடுமண் உறைக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து குளத்தை முழுமையாக தூர்வாரினால் மேலும் பல உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்தனர். இதனால் குளத்தை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உறைக் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்த அந்த பகுதி மக்கள் தீர்த்த குளத்திற்கு வந்து உறை கிணறை பார்வையிட்டு சென்றனர்.

Tags : Thanjavur , During the excavation of the temple pond at Thanjavur: Discovery of 7 bore wells during the Chola period
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...