×

முதுநிலை கோயில்களில் மீண்டும் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள் போக மற்ற  நிலங்கள், மனைகள், கட்டிடங்கள், வாடகைக்கு விடப்பட்டு கோயில்களுக்கு வருவாய் பெருக்குகின்ற வகையில் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் 48 முதுநிலை கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்ரியா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்தாண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட 620 பணிகள்  இதுவரையில் ரூ.666 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்  மற்றும் இதர பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது, இந்த ஆண்டு சுமார் 2,417 கோயில்களில் சுமார் ரூ.1301.29 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு கிராமப்புற ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இருக்கின்ற கோயில்களுக்கு ரூ.129.59 கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்தாண்டு கூடுதலாக ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 2000 கோயில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரூ.40 கோடி அரசின் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 தேவஸ்தான கோயிலின் நிர்வாக மற்றும் பராமரிப்பு செலவுக்காக ரூ.3 கோடியிலிருந்து ரூ.6 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. பதினெண் சித்தர்களோடு தொடர்புடைய கோயில்களில் சித்தர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கப்படும். முதற்கட்டமாக திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் கமலமுனி சித்தர், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் பாம்பாட்டி சித்தர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுந்தரானந்த சித்தர், ஆகிய மூவருக்கும் கோயில்களின் சார்பில் விழா எடுப்பது தொடர்பாகவும், கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் சிறப்பாக நடத்தப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் ஆகிய 3 கோயில்களில் தங்கத்தேர்களும், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், திருக்கருகாவூர் முல்லைவனநாதசுவாமி கோயில்களில் வெள்ளித்தேர் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் தொடர்பாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கணகசபை மீது ஏறி ஆண்டாண்டு காலாமாக பக்தர்கள் தரிசனம் செய்து வந்த சூழ்நிலையில் மீண்டும் உருவாக்கப்பட்டு பக்தர்கள் மகிழ்ச்சியாக தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்  கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே நடக்கும் பிரச்சனை நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுத்தப்படும். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை படிக்கட்டுளாக மாற்றி அதில் பயணம் செய்து கொண்டிருப்போம். தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள் போக மற்ற நிலங்கள், மனைகள், கட்டிடங்கள், வாடகைக்கு விடப்பட்டு கோயில்களுக்கு வருவாய் பெருக்குகின்ற வகையில் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Sekarbabu , Lectures and art performances will be held again in the senior temples: Minister Sekarbabu Information
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...