மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் 108 திவ்வய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில், கடந்த ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ பெண்களை கோயில் நிர்வாகம் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்போல் பரவியது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபுவை அழைத்து, பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்களை நேரில் சந்தித்து எந்த இடத்தில் அடித்து விரட்டப்பட்டார்களோ அதே இடத்தில் அவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, முதல்வர் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தெற்கு மாட வீதியில் உள்ள கோயில் கேட் மூடி இருப்பது குறித்து சர்ச்சையும் அது குறித்த புகாரும் எழுந்தது. இது குறித்து, தகவலறிந்த திருப்போரூர் எல்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி தலசயன பெருமாள் கோயிலில் நேற்று ஆய்வு செய்தார். இங்கு கோயில் மேலாளராக இருப்பவர் சந்தானம். இவருக்கு வேண்டியப்பட்டவர்களை சேரில் அமர வைத்தும், ஒரு சிலரை தரையில் அமர வைத்தும் அன்னதானம் வழங்குவதை ஆய்வின்போது எம்எல்ஏ நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, கோயில் மேலாளர் சந்தானத்தை அழைத்து கோயிலுக்கு வரும் அனைவரையும் சரிசமமாக உட்கார வைத்து அன்னதானம் வழங்க வேண்டுமென கடிந்து பேசினார்.
தொடர்ந்து, கோயில் அலுவலகத்திற்கு சென்ற எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி தினமும் எத்தனை பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டுமென அரசு நகல் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு, கோயில் மேலாளர் நகல் உள்ளது எனக் கூறினார். ஆனால், அங்குள்ள அனைத்து பீரோவில் தேடிப் பார்த்தும் நகல் கிடைக்கவில்லை. இதில், கோபமடைந்த எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி கோயில் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அன்னதானத்திற்கு கூடுதலாக பொருட்கள் தேவைப்பட்டால் அரசிடமிருந்து பெற்றுத் தரப்படும். கோயில் உண்டியலை, எண்ணும் போது உள்ளூர் மக்கள், அர்ச்சகர்கள் மற்றும் காவல் துறையினர் முன்பு தான் திறக்க வேண்டும் என எச்சரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆய்வின் போது, விசிக திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, மாமல்லபுரம் நகர செயலாளர் ஐயப்பன், நிர்வாகிகள் சாலமன், பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.