சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்ட எல்லையான புஞ்சை புளியம்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சீட்டுக்கு அடியில் இருந்த சாக்கு பைகளில் ஒன்றே கால் அடி உயரம், 5 கிலோ எடை கொண்ட கிருஷ்ணர், மற்றும் ஒரு அடி உயரம், 3 கிலோ எடை கொண்ட ஏழு தலை நாகத்தின் மேல் நிற்கும் விநாயகர் ஆகிய பொன் நிறத்திலான 2 உலோக சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த சசிதரன், காசர்கோடு இஸ்மாயில், மற்றும் கர்நாடக மாநிலம் மடிகேரி முகமது, ரஷீத், சாகித் பாக் என்பதும், 2 உலோக சிலைகளை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து மைசூருக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.