திருச்சி: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: அகில இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் 950 மரணங்கள் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி ஒருவர் கூட காவல் துறை கட்டுப்பாட்டில் உயிர் இழக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. காவலர்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்தை குறைப்பதற்காக கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சில மலைப்பகுதிகளில் மட்டும் தான் இருக்கிறது. அதையும் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையில் சேர 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளார்கள். கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்றார்.