திருமங்கலம்: விதி மீறி மண் அள்ளியதாக பாஜ ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன். பாஜ நிர்வாகி. இவருக்கு சொந்தமான குவாரி செக்கானூரணியில் உள்ளது. இதில் விதிகளை மீறி மண் அள்ளி வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தன. திருமங்கலம் ஆர்டிஓ அனிதா நேரடி விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை, போலீசார் சோதனை நடத்தி டிப்பர் லாரிகள் உள்ளிட்ட 6 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஒன்றிய கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகனை நேற்று செக்கானூரணி போலீசார் கைது செய்தனர். மணல் அள்ளிய வழக்கில் பாஜ ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.