×

மும்பையுடன் இன்று மோதல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி?

மும்பை: ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குள்  நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி இன்று நடக்கிறது. இதில் டெல்லி மும்பையுடன் மோதுகிறது. 2022 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 68 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 2 லீக் ஆட்டமே எஞ்சி உள்ளன. குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இதில் குஜராத் 20 புள்ளியுடன் முதல் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 18 புள்ளியுடன் 2ம் இடத்திலும், லக்னோ 18 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகளும் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணி எது என்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் உள்ளன.இதில் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்திலும், டெல்லி அணி 14 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.டெல்லி அணி இன்று இரவு மும்பையுடன் மோதுகிறது. பெங்களூர் அணியின் ரன்ரேட் நன்றாக இருப்பதால், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி மும்பையை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால்தான் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

அதே நேரத்தில் டெல்லி இன்று தோல்வியடைந்தால் பெங்களூரு எளிதில் பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். எனவே இன்றைய போட்டியில் டெல்லி ஆவேசத்தையும் அதிரடியையும் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல் கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Tags : mumbai , Mumbai, Play Off, Delhi
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!