கடத்தூர்: தொடர் மழையால், கடத்தூர் பேரூராட்சியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மக்கிய உரங்கள் வீணாகி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்பில், மக்கும் குப்பைகளை பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காலையில் வீடு வீடாக சென்று, பொதுமக்களிடம் இருந்து குப்பை கழிவுகளை மக்கும், மக்காத குப்பையாக பிரித்து சேகரித்து, உரத்திடலுக்கு கொண்டு வருகின்றனர்.
இவற்றை கொட்டி தரம் பிரித்து மக்கச்செய்து உலர்த்தி, இயந்திரம் மூலம் ஜலித்து மக்கிய உரமாக பிரித்து எடுக்கின்றனர். அவற்றை கிலோ ஒரு ரூபாய் என விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், மாதக்கணக்கில் சேகரித்து வைக்கப்பட்ட மக்கிய குப்பைகள், தற்போது பெய்துவரும் தொடர் மழையில் நனைந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், வீணாகி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அவற்றை விவசாயிகளுக்கு பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.