×

காஞ்சி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு: டாக்டர்கள், ஊழியர்கள் பீதி

காஞ்சிபுரம், மே 21: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் கலெக்டர் சென்று திடீர் ஆய்வு செய்தார். இதனால் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பீதியடைந்தனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர். அதில் நூற்றுகணக்கானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக, அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை என மாவட்ட நிர்வாகத்துக்கு, தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் அவசர சிகிச்சை, மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள், ரத்த சுத்திகரிப்பு ஆகிய பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையை உறுதி செய்த அவர், சிகிச்சை பெறும் உள்நோயாளிகளிடம் குறைகள், மருத்துவர் சிகிச்சை அளிக்கும் முறைகள், படுக்கைகள், மருத்துவ உபகரண தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மருத்துவர்களிடம், நோயாளிகளை கனிவுடன் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு திருப்தியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனையில் அளிக்கும் சிகிச்சையை விட ஒரு மடங்கு அதிமாக அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அரசு மருத்துவமனைக்கு திடீரென நள்ளிரவில் கலெக்டர் சென்று, அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்ததால், மருத்துவர்கள் பதற்றம் அடைந்ததுடன், பீதியடைந்தனர். மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : Kanchi Government Hospital , Kanchi Government Hospital, Collector sudden inspection, doctors, staff panic
× RELATED காஞ்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை