சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெரினா கடற்கரை சாலையில், காவல் துறை தலைவராக டிஜிபி அலுவலகம் எதிரில் உள்ள கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச்சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது.
இது தொடர்பாக ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்னையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல் துறை முயல்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும் என்று தாய்மார்கள் அஞ்சுகிறார்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அப்பாவி மக்களின் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அதிமுக போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.