×

லடாக் விவகாரத்தில் தைரியமில்லாத பதிலால் ஒன்றும் செய்ய முடியாது: மோடி மீது ராகுல் தாக்கு

புதுடெல்லி: ‘தேச பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்’ என முன்னாள்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் அத்துமீறியதை அடுத்து, அங்கு தனது ராணுவ கட்டமைப்பை வலிமைப்படுத்த பாங்காங் திசோ அருகே  பாலம் ஒன்றை ஏற்கனவே கட்டியது. இந்நிலையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் மேலும் ஒரு பெரிய பாலத்தை கட்டி வரும் செயற்கைக் கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிடுகையில், ‘சீனா பாங்காங் பகுதியில் முதல் பாலம் கட்டும்போது, இந்திய அரசு நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்றது. சீனா பாங்காங்கில் இரண்டாவது பாலம் கட்டியுள்ளது. இதற்கும் இந்திய அரசு, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்கிறது.  தேசிய பாதுகாப்பிலும்,  ஒருமைப்பாட்டிலும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே இல்லை. தைரியமில்லாத, பணிவான பதில் ஒன்றும் செய்ய போவதில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘‘பாங்காங் திசோ ஏரியில் சீனா கட்டும் 2 பாலங்களும், கடந்த 1960ம் ஆண்டு முதல் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பகுதியில் உள்ளன. நமது பிராந்தியத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பையோ, சீனாவின் நியாயமில்லாத உரிமைகோரலையோ, இதுபோன்ற கட்டமைப்புகளையோ இந்திய அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது’’ என்றார்.

Tags : Ladakh ,Rahul ,Modi , Ladakh, Modi, Rahul
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...