புதுடெல்லி: பீகாரில் கடந்த 1991முதல் 1996ம் ஆண்டு வரை லாலு பிரசாத் முதல்வராக இருந்தார். அப்போது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக ரூ.950 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட 5 வழக்குகளில் லாலு பிரசாத்துக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ரயில்வேயில் வேலை கோரியவர்களிடம் பணத்துக்கு பதிலாக, நிலங்கள் லஞ்சமாக வாங்கப்பட்டதாகபுகார்கள் எழுந்தன. இது பற்றி சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில்,லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, லாலு குடும்பத்துக்கு தொடர்புடைய 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.