சென்னை: டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதால் காயமடைந்தவருக்கு தெற்கு ரயில்வே 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மாநில நுகர்வோர் ஆணையம் உறுதி செய்துள்ளது. விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன், 1998-ம் ஆண்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு செல்ல முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்துள்ளார். இந்தநிலையில் முன்பதிவில்லாத பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பதிவு பெட்டியில் பயணிக்க டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி கோரி உள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர், மாரியப்பனை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம் மாரியப்பனுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேயிக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தெற்கு ரயில்வே, மாநில நுகர்வோர் ஆணையத்தில் முறையீடு செய்த நிலையில், மனுவை விசாரித்த ஆணையம், 10 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்துள்ளது.