×

கோவை அருகே பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை: மேற்படிப்புக்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (27). இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேற்படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இதற்காக மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று  மருத்துவர் ராசி வீட்டின் 3வது மாடியில் படிக்க சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது தாய் டாக்டர் செந்தாமரை மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால், அருகில் இருந்த ஜன்னல் வழியாக செந்தாமரை பார்த்த போது, ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல்அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று, அறைக்கதவை உடைத்து  ராசியின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமணமான 6வது மாதத்தில் ராசி தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. இளம் மருத்துவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமா அல்லது நீட் தேர்வு அச்சம் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Coimbatore , Coimbatore, female doctor, hanged, committed suicide
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...