தஞ்சை: தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனையில் 100 எல்பிஎம் ஆக்ஸிஜன் ெஜனரேட்டர் திறப்பு விழா இன்று நடந்தது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து அளித்த பேட்டி: 100 எல்பிஎம் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் வாயிலாக 20 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்ஸிஜன் ஒரே நேரத்தில் அளிக்க முடியும். இங்கு மருத்துவத்துறை சார்பில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சென்னம்பூண்டியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கையின் படி தனியார் இடத்தை அரசு பணம் செலுத்தி வாங்கி அதனை சீரமைத்து, 24 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது. கடந்த ஆண்டில் 6 லட்சம் பேர் அரசு பள்ளிகளை தேடி வந்துள்ளனர். பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு முதல்வர் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை அறிவித்துள்ளார். 30 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை கூட திமுக ஆட்சியில் தான் நடந்துள்ளது.