ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் நேற்று பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு குமுதவல்லி பெருதேவியார், தேவி, பூதேவி சமேத பிந்து மாதவ பெருமாள் கோயிலில் சுபக்ருது ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று திருத்தேர் விழா நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருத்தேர்விழாவில் எம்எல்ஏக்கள் வில்வநாதன், அமலு விஜயன், மாதனூர் ஒன்றியக்குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், ஊராட்சி தலைவர் சுவிதா கணேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆம்பூர், துத்திப்பட்டு, கன்றாம்பல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலம் நடந்தது.