கோவை : கோவை ஆத்துப்பாலத்தில் மாநகராட்சி மின் மயானம் உள்ளது. தனியார் அமைப்பின் மூலமாக இந்த மயானம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மயானத்தில் தினமும் சுமார் 10 சடலங்கள் எரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 1200க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டது. இதில் குவிந்த 20 டன்னிற்கும் மேற்பட்ட சடலம் எரித்த சாம்பல், எலும்பு கழிவுகள் அகற்றப்படாமல் மயானத்தின் பின் பகுதிகளில் மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்டுள்ளது.
மூட்டைகள் சேதமடைந்த நிலையில் இந்த கழிவுகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு ஆங்காங்கே சாம்பல் தேக்கமாக மாறிவிட்டது. சில நேரங்களில் அதிக காற்றுவீசும் போது சாம்பல் கழிவுகள் பறப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மயானத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியார் அமைப்பிடம் விடப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதியில் எந்த சுகாதார பராமரிப்பு பணியும் நடத்துவதில்லை. பராமரிக்கவேண்டிய அமைப்பினர் சாம்பல்களை அலட்சியமாக கையாள்வதாக தெரிகிறது.
சடலத்தை சாம்பலாகும் வரை எரிக்கவேண்டும். குறிப்பாக சடலம் 6 மணி நேரம் எரிந்தால் மட்டுமே முழுமையாக சாம்பலாக மாறும். ஆனால் மயான பராமரிப்பாளர்கள் 5 மணி நேரம் வரை மட்டுமே எரியூட்டுவதாக தெரிகிறது. எலும்புகள் அரைகுறையாக எரிந்த நிலையில் வெளியேற்றப்படுகிறது. கொரோனா நோய் பரவல் கால கட்டத்தில் அதிகளவு சடலங்கள் எரியூட்ட குவிந்தது. இந்த சடலங்களை முழுமையாக எரிக்கவில்லை. சாம்பலில் பெரிய எலும்புகள் காணப்பட்டதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
மயான சாம்பல்களை சாதாரண குப்பையில் கொட்டக்கூடாது. முறையாக அகற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மண் கொட்டி மூடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தினரும் இந்த சாம்பல் கழிவுகளை அகற்றாமல் அலட்சியமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.