சென்னை: கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி (43). இவரது மனைவி தேவி (36). இவர்கள், கடைகளுக்கு டீ வியாபாரம் செய்கின்றனர். இவர்களது மகள் சிந்து (17). கடந்த 2020 டிசம்பரில் தோழி வீட்டின் 3வது மாடியில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில், உயிர் தப்பிய சிந்து 2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே உள்ளார். இந்நிலையில் ஆசிரியர்கள், தோழிகள் உதவியுடன் வீட்டில் இருந்தபடி படித்து சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். அப்போது இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து மாணவி சிந்துவின் சிகிச்சைக்கு உதவுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைதொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிந்து நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
சிந்துவுக்கு இரண்டு கால்கள் உடைந்தும், பல்வேறு இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக தொடர்ந்து, நிபுணத்துவம் வாய்ந்த அரசு டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். நேற்று பல்துறை அடங்கிய பரிசோதனை சிந்துவுக்கு செய்யப்பட்டது. இன்று ஸ்டான்லி மற்றும் சென்னை பல் மருத்துவமனையில் இருந்து சில டாக்டர்கள் வர உள்ளனர். அவர்களும், சிந்துவை பரிசோதித்து, சிகிச்சை நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க உள்ளனர். முதற்கட்டமாக சிந்துவை நடக்க வைக்கவும், அதன்பின் அவரை சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.